புதைக்கப்படுகிறது புரட்சி?

   பல்வேறு தடைகளைத் தாண்டி, இடையறா போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு. ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு. புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகள். பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலைமுயற்சிகள். அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பா
க்கிக் குண்டு. அதை நீக்க ஓர் அறுவைச் சிகிச்சை. இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917ல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக சீர்குலைவு அடைந்துகொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

1924 ஜனவரி 21 அன்று தனது ஐம்பத்து மூன்றாவது வயதில் லெனின் காலமானார். ‘நியூரோசிபிலிஸ்’ எனப்படும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளே அவரது மறைவுக்கு காரணமென்று மருத்துவர்களால் சொல்லப்பட்டது. லெனின் மறைந்தபோது ரஷ்யப்புரட்சியை கடுமையாக எதிர்த்தவரும், லெனினின் எதிரியாக கருதப்பட்டவருமான பிரிட்டிஷ் தலைவர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அஞ்சலி சுவாரஸ்யமானது. ‘ரஷ்யர்களின் துரதிர்ஷ்டம் லெனினின் பிறப்பு. அதைவிட மோசமான படுமோசமான துரதிர்ஷ்டம் அவருடைய இறப்பு’. சம்பிரதாயத்துக்காகச் சொல்லாமல், சர்வநிச்சயமாக சொல்லலாம். ரஷ்யர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு லெனின்.

எனவேதான் அவரது உடலைப் புதைக்க அப்போதிருந்த ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கு மனமில்லை. எதிர்கால விஞ்ஞான வளர்ச்சியில் எது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம் என்று கூறி, லெனினின் உடலைப் பதப்படுத்தி பாதுகாக்க முடிவெடுத்தார்கள். ஒருவேளை இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் தொழில்நுட்பம் வருமேயானால், லெனினை உயிர்ப்பிக்க வைக்கலாம் என்றுகூட அவர்கள் நம்பியிருக்கலாம்.

மூன்று நாட்கள் லெனினின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. பத்து லட்சம் பேர் அஞ்சலி செலுத்திய பிறகு, அவரது உடல் பதப்படுத்தப்பட்டு நிரந்தரக் காட்சியாக மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த இடத்துக்கு லெனின் மாஸோலியம் என்று பெயர் சூட்டப்பட்டது. ‘மாஸோலியம்’ என்றால் கல்லறை என்று பொருள். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட தொண்ணூறு ஆண்டுகளாக பல கோடி உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் லெனினின் உடலைப் பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ரஷ்யாவில் நாத்திகம் ஒரு மதமாகவே நிலைநின்று விட்டாலும், கிறிஸ்தவ ஆதிக்கத்துக்கு செல்வாக்கு அதிகம். அவ்வப்போது கிறிஸ்தவ குருமார்கள் லெனின் உடல் முறையாக அடக்கம் செய்யப்படாதது குறித்து முணுமுணுத்தாலும், வெளிப்படையாக குரல் கொடுக்க தைரியமின்றி கிடந்தார்கள்.

1989ம் ஆண்டு ரஷ்ய பாராளுமன்றத்தில் அமைச்சர் ஒருவர், ‘லெனின் தனது உடலை தனது தாயாரின் சமாதிக்கருகில் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். எனவே செஞ்சதுக்கத்தில் இருக்கும் அவரது உடலை செயிண்ட் பீட்டஸ்பர்க்கில் புதைக்க வேண்டும்’ என்று சொன்னார். நாடு முழுக்க அவருக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

1990ம் ஆண்டு லெனினால் உருவாக்கப்பட்ட சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு (யு.எஸ்.எஸ்.ஆர்.) சிதறியது. ‘கம்யூனிஸம் தோற்றுவிட்டது’ என்று கூறி, ரஷ்யப் புரட்சியின் அடையாளங்களாக இருந்த நினைவுச்சின்னங்கள் பலவும் அப்போது அழிக்கப்பட்டன. பொதுமக்களே இந்த அழிப்புப் பணியில் ஆர்வமாக இருந்தார்கள். ரஷ்யாவின் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக திகழ்ந்த ஸ்டாலினின் சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆனால் அப்போதும் கூட லெனினின் உடலை அடக்கம் செய்வது குறித்து யாரும் நினைத்துப் பார்க்கக்கூட இல்லை. ஏனெனில் ரஷ்யர்களிடம் அவருக்கு இருந்த இமேஜ் அந்தளவுக்கு அசைக்க முடியாததாக இருந்தது.

காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிறந்து வளர்ந்த தலைமுறைக்கு முந்தைய தலைமுறை மாதிரி பெரியளவில் ‘லெனின் சென்டிமெண்ட்’ இப்போது இல்லை. இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட மிக்கேல் கோர்ப்பச்சேவ் (சோவியத் ரஷ்யா சிதறக் காரணமாக இருந்தவர்) சில ஆண்டுகளுக்கு முன்பாக, யாரும் பேச விரும்பாத இந்த விஷயத்தை பேசத் தொடங்கினார். ‘புதைந்துபோன விஷயங்களைத் தோண்டியெடுக்கும் நிலையில் நாம் இப்போது இல்லை. இன்னமும் லெனின் உடலை நாம் பதப்படுத்தி, பாதுகாத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமேயில்லை. அவரது குடும்பத்தினர் விரும்பியபடி முறையாக மரியாதை செய்து அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்றார்.

கோர்ப்பச்சேவின் இந்தப் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பத் தொடங்கியபோதிலும், அவரது கருத்துக்கும் நிறைய பேர் ஆதரவு தெரிவிக்கத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட நான்கைந்து காலமாக எதிரும் புதிருமாக வரிந்து கட்டிக்கொண்டு ரஷ்யர்கள் இந்த விஷயத்தை விவாதித்து வருகிறார்கள். ரஷ்ய ஆளுங்கட்சி இந்த விவகாரத்தை முள் மேல் பட்ட சேலையாக மிகக் கவனமாக கையாண்டு வருகிறது. அதே நேரம் லெனினின் உடல் புதைக்கப்பட வேண்டும் என்கிற மனவோட்டத்தை மக்களிடம் ஏற்படுத்தும் பணிகளையும் மறைமுகமாக செய்துவந்தது. கடந்த ஆண்டு லெனினின் உடலைப் புதைக்கலாமா என்று மக்களிடம் கருத்துகோரி ‘குட் பை லெனின்’ என்கிற இணையதளத்தை கூட உருவாக்கி இருந்தது.

மூன்றாவது முறையாக விளாதிமீர் புடின் ரஷ்ய அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் ‘லெனின் உடல் புதைப்பு’ விவகாரத்தை தீவிரமாக்கியிருக்கிறார். குட்டியை விட்டு ஆழம் பார்ப்பது போல சில நாட்களுக்கு முன்பாக புடினுக்கு நெருக்கமானவரும், ரஷ்ய கலாச்சார அமைச்சருமான விளாதிமீர் மெடின்ஸ்கியை வைத்து ஒரு கருத்து கூற வைத்திருக்கிறார்.

‘லெனினின் உடல் இத்தனை காலமாக அடக்கம் செய்யப்படாமல் இருப்பது அபத்தமானது. மரியாதைக்குரிய தலைவரான அவரது உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட வேண்டும். தனது உடல் எளிமையான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டுமென்பது அவரது கடைசி ஆசை. அதைக்கூட இத்தனை ஆண்டுகளாக நாம் செய்யாமல் இருப்பது வெட்கத்துக்குரியது. தற்போது அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றிவிடலாம்’ என்று ரஷ்ய வானொலிக்கு அளித்த பேட்டி ஒன்றில் பொரிந்து தள்ளியிருக்கிறார் மெடின்ஸ்கி.

முன்பு 89ல் லெனின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக அமைச்சர் ஒருவர் பேசியபோது எழுந்த கடும் எதிர்ப்பெல்லாம் இப்போது இல்லை. மாறாக இணையதளத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 56 சதவிகிதம் பேர் லெனினின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருக்கிறார்கள். முந்தையக் கணக்கெடுப்பில் 48 சதவிகிதம் பேர் இக்கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். வருடா வருடம் லெனினின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்கிற கருத்துக்கு ரஷ்யர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. நடப்பு நிலவரத்தைப் பார்த்தால் விரைவில் லெனினின் உடல் அடக்கம், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அவரது தாயாரின் சமாதிக்கருகே நடக்கும் என்றுதான் தெரிகிறது.

இந்த விவகாரங்கள் சூடு பிடிப்பதற்கு முன்பாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி தன் கவலையை தெரிவித்திருந்தது. ‘சோவியத்தின் வரலாற்றை மாற்றி எழுத நினைக்கிறார்கள். புரட்சித் தலைவர் லெனினின் நினைவுகளை மக்கள் மனதில் இருந்து முற்றிலுமாக அகற்ற நினைக்கிறார்கள்’ என்று அக்கட்சி கருத்து தெரிவித்திருந்தது.

புரட்சியைப் புதைக்க முடியுமா என்கிற கேள்விக்கு காலம்தான் விடையளிக்க வேண்டும்.
-இணைய செய்தியாளர் - குருஜி